Tuesday 17 April 2012

சூழலியலுக்கு கிடைத்த வெற்றி ..மீனவனுக்கு? - டி.அருள் எழிலன்.

கூடங்குளம் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. அல்லது சூழலியல் போராட்டத்தின் புதிய துவக்கமாய் கணிக்கப்படுகிறது. பொதுவாக சூழலியல் ஆர்வலர்களுக்கு சுற்றுச் சூழல் தொடர்பான விஷயங்களில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்கிற வருத்தம் உண்டு. சாக்கடையை சுத்தம் செய்வதில் தொடங்கி  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது வரையான பல விஷயங்களில் மக்கள் போதுமான அக்கறை யில்லாதவர்களாக அவர்கள் வருத்தப்பட்டுக் கொள்வார்கள். அதற்காக மக்களை படிப்பிப்பதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்களின் பணி. இந்தியா காட் ஒப்பந்தத்தின் மூலம் உலக மயச் சூழலுக்குள் அடியெடுத்து வைத்த பிறகு, இன்னொரு நாட்டின் இனப்படுகொலை விஷயம் என்றில்லாமல்,  உள்ளூரில் உள்ள சூழலியல் பிரச்சனை கூட ஒரு வெளிநாட்டு பிரச்சனைதான். மரபணு மாற்றக் கத்தரி, ஏரிகளை அழித்து காங்கிரீட் கட்டிடங்களை உருவாக்குவது, மலைகளைக் குடைந்து ஆபத்தான் நியூட்டிரினோ ஆலைகளை உருவாக்குவது என எதுவுமே ஒரு உள்ளூர் பிரச்சனை மட்டுமல்ல,  ஆனால் இம்மாதிரியான போராட்டங்களில் உள்ளூர் மக்களே போராடுகிறவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் அந்த போராட்டம் தங்களை ஆள்கிற சொந்த அரசுக்கு எதிரான போராட்டமாக மட்டும் இல்லை சுரண்டல் வர்த்தக வலையமைப்பில் அவர்கள் ஒரு  ஏகாதிபத்திய  அரசுகளுக்கு எதிராகவே போராடுகிறார்கள். தேசம் கடந்த வர்த்தக வலையமைப்பில் லாப வெறியை பங்கிட்டுக் கொள்ளும் போட்டியில் இந்த மக்களை பலி கொடுக்க இந்த வெறியர்கள் அஞ்சுவதில்லை. போராட்டங்களில் மக்கள் பலி கொடுக்கப்பட பல நேரங்களில் உள்ளூர் சமூக அமைப்பை போராடும் மக்களுக்கு எதிராக  ஒரு கருவியாகவும் பயன்படுத்துகிறது.  இந்த புரிதல்களிருந்துதான்  இடிந்தகரை  போராட்டத்தை நாம் காண முடியும்.இந்தியாவின் பொருளாதார நலன்களோடும், ஆணு ஆயுத வல்லரசுக்கனவோடும், ஏகாதிபத்திய வல்லூறுகளோடும்தான் இடிந்தகரை மக்கள் போராடினார்கள். அடையாளத்தில் அது கூடங்குளம் போராட்டம் போராடியவர்கள் இடிந்தகரை மக்கள் அதாவது இடிந்தகரையை ஒட்டிய பெருமணல், கூத்தங்குளி, கூடுதாளை, உள்ளிட்ட மேலும் பல கிராம மீனவ மக்கள். அவர்களுக்குத் துணையாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் போராடினார்கள். மிக மிக மிக சிறிய அளவில் வைராவிக்கிணறு, விஜயாபதி உள்ளிட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய நாடார் விவசாய மக்கள் அணு உலைக்கு எதிராக போராடினார்கள். ஆனால் இந்தப் போராட்டம்.

கடலோர மீனவக் கிராமங்களைத் தாண்டி சமவெளிச் சமூகத்தின் ஆதரவைப் பெற வில்லை. பெற வில்லை என்பதை விட சமவெளிச்சமூகம் அதை ஒதுக்கப்பட்ட மீனவ மக்களின் போராட்டமாகத்தான் பார்த்தது. அல்லது கிறிஸ்தவ மீனவர்களின் போராட்டமாகத்தான் பார்த்தது. ஒரு வர்க்கமாகக் கூட  அவர்களை அங்கீகரிக்க எவரும் தயாரில்லை.//நாடார்கள், தலித்துக்கள், மீனவர்களின் இணைந்த போராட்டம் இது என்று அடிக்கடி உதயகுமார் ஒரு வார்த்தயைப் பயன்படுத்துகிறார். // அந்த உண்மைகளை அவரின் முடிவுக்கே விட்டு விடுகிறேன் அது அவர் சார்ந்த உண்மையாக இருக்கலாம். ஆனால் என் எண்ணங்களில் நான் பார்த்த வரையில் அப்படியில்லை என்பதை இங்கே பதிவு செய்து விடுகிறேன்.  உண்மையில்  நாடார்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தும் போது அதை நான் ஒரு விவசாய அடையாளத்துடனே எடுத்துக் கொள்வேன் ஒரு நிலவுடமைச் சமூகத்தின் பண்பாகவே நான் அதை புரிந்து கொள்வேன் என் அரசியல் அறிவுக்கு உட்பட்டு.  99.9% நாடார் விவசாய மக்கள் அணு உலையை ஆதரித்தார்கள். அதற்கு நிலம் கொடுத்தவர்கள், காண்டிராக்ட் பெற்றுக் கொண்டவர்கள், அணு உலையில் வேலை வாங்கிக் கொண்டவர்கள், இவர்கள் எல்லாம் யார் என்ற உண்மையை உதயகுமார் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றைக்கு மீனவ மக்களின் மனங்களில் பெரும் உயரத்தில் இருக்கும் உதயகுமார் இந்த கசப்பான உண்மைகளை ஒரு விமர்சனமாக ஏற்றுக் கொண்டு. விவசாயகக் குடிகளை களையும் இந்த போராட்டத்தில் ஒரு வலுவான தளமாக மாற்ற வேண்டும். அணு உலை வேண்டாம் என்று நினைக்கக் கூடிய எவர் ஒருவரும் தென் தமிழக நாடார் விவசாய மக்களை அணு உலைக்கு எதிராக அணி திரட்ட வேண்டும்.

வரலாற்று ரீதியாக கடந்த 25 வருட மீனவ மக்களின் போராட்டங்கள் புவியியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட விதத்தையும், அந்த ஒடுக்குமுறையில் அவர்கள் அடைந்த வேதனைகளையும் புரிந்து புதிய உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.விவசாயிகளின் துணையில்லாமல் மீனவன் வெல்ல முடியாது மீனவனின் துணையில்லாமல் விவசாயிகள் வெல்ல முடியாது என்கிற யாதார்த்தத்தை உணர்ந்து சுய விமர்சனம் தேவைப்பட்டால் ஏற்றுக் கொள்ளலாம்.திரளும் தன்மையை இயல்பாகவே கொண்ட, மாதா கோவிலில் மணியடித்தால் கோவில் முற்றத்தில் திரளுவார்கள் என்ற இயல்பான  போக்கைக் கொண்ட மக்கள் கூட்டத்தை அடித்தளமாக்கி இந்த போராட்டத்தில் நாம் வெற்றிபெற வேண்டும் என்றால் நில ரீதியாக விவசாயிகளின் ஆதரவில்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை என்பது என் கருத்து. கடலோரத்தின் வாயிலாக அரசு நிர்வாகத்தின் இதயமாக இருக்கும் சமவெளிச் சமூகத்தின் ஆதரவில்லாமல் இந்த போராட்டம் முழு வெற்றி பெறாது.

நான் வைத்திருக்கும் இந்த விமர்சனத்தை  குறுகிய மனம் கொண்டு அணுகாமல் விசாலாமான பார்வையோடு  அணுகி இரண்டு சமூகங்களின் வெற்றிப் போராட்டமாக இதை மாற்ற வேண்டும்.மற்றபடி இந்த போராட்டம் இனி வரும் காலத்தில் பல பேச்சுவார்த்தை காலக்கட்டங்களைக் கடந்து நிற்கும், இப்போது அரசுக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதிகளைத் தவிற வேறு எதையும் செய்ய முடியாத நிலையில் இதுதான் நடக்கும் என்பது ஏற்கனவே எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். இப்போது நடந்திருப்பதும் சரிதான் என்பதைத் தவிற வேறு வழிகளே இல்லை. ஆக மொத்தம் இந்த போராட்டம் சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்டவர்களுக்கு வெற்றி, இனி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் வேறு எந்த பகுதிகளிலும் புதிய அணு உலை ஒன்றை அமைக்க இந்திய அரசு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.  நமது பச்சைத் தமிழனுக்கும் தெரியும் ஆணு உலை ஆபத்தானது என்று ஆனாலும் அவனுக்கு  மின்சாரம் வேண்டுமே? அதற்காக மீனவனை பலி கொடுக்கத் தயாராகி விட்டான். இடிந்தகரை, கூட்டப்புளி தீவிரவாதிகள் தங்களை பலியிட்டு இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக வரலாற்றில் ஆகியிருக்கிறார்கள். சூழலியல் விழிப்புணர்வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான் இந்த போராட்டம். ஆனால் மீனவ மக்களுக்கு? அது இன்னொரு மண்டைக்காடு கலவரத்தைத்தான் நினைவு படுத்துகிறது. அவர்கள் ஒரு கல்லறைக்குள் வாழப்பழக வேண்டும்.

ஆமாம் நண்பர்களே எண்பதுகளில் அரசு இயந்திரமும் சமவெளிச் சமூகமும் இணைந்து அந்த மக்களை தனிமைப்படுத்தி தாக்கினார்கள் இப்போதும் அதுதான் நடந்தது. அவர்களுக்கு அது தோல்வியே இனி தங்களின் அரசியல் உரிமையை நிலை நிறுத்த அவர்கள் அணு உலைக்கு எதிராகவும் போராடுவார்கள். அதை விட முக்கியமாக கடலோரத் தொகுதிகளான  31 தொகுதிகளில் சமவெளிச் சமூகத்தின் தலைவர்களை உருவாக்க வெறும் ஓட்டுப் போடும் பிண்டங்களாக இருந்ததை விட்டொழித்து இனி தங்களுக்கான  பிரதிநித்துவத்தை  உருவாக்க்கும் படி  பங்கீடு கேட்க வேண்டும். தனி தலைமைகளை அவர்கள் தேட வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு விடியல் வரும்.

No comments:

Post a Comment