Thursday 26 April 2012

மீன் பிடி தடைக் காலம் யாருக்காக?


நேற்று(15.04.2012) முதல் இந்தியாவின் கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடி தடைக் காலம் தொடக்கி உள்ளது. இனி 45 நாட்கள் இயந்திர படகு மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்க முடியாது.
   
      மீன் வளத்தை பெருக்கும் பொருட்டு, மீன்களின் இனப் பெருக்க காலத்தில் இந்த தடை விதிக்கப் படுவதாக அரசுகள் கூறுகின்றன. மேலோட்டமாக பார்க்கும் போது மீனவர்களுக்கு நன்மை பயக்கும் விஷயமாக இது தோன்றினாலும், இதிலிருக்கும் உள்குத்து மிக மோசமானதாகும்.
       
      பல கடல் சார் விஞ்ஞானிகள், அக்டோபர் மாதம் தான் இந்திய கடல் பகுதியில் மீன்களின் இனப் பெருக்க காலம் என்று சொல்லி கொண்டிருக்கும் பொழுது, மத்திய அரசு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் கிழக்கு கடலிலும், ஜூன், ஜூலை இந்தியாவின் மேற்கு கடலிலும் மீன் பிடி தடை விதிக்க காரணம் என்ன? அதே போல் ஒரே சீதோஷ்ண நிலை கொண்ட இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் தடை விதிக்க காரணம் என்ன?

      மீன்பிடி தடை என்ற பெயரில் வெளி பொருத்தும் இயந்திரப் படகுகள் தவிர மற்ற அனைத்து இயந்திர படகுகளுக்கும் தடை விதிக்கப் படுகிறது. இது சட்டம் போடுபவர்களின் உச்சபட்ச அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மீன்கள் தனது முட்டைகளை பெரும்பாலும் பாறை இடுக்கிலும் மணற்பரப்பிலுமே இடுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் அரசால் மீனவர்களுக்கிடையில் திணிக்கப்பட்ட, இழு வலையால் மட்டுமே தொழில் முறை பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. (காங்கிரஸ் ஆட்சியில் இழுவலை தொழில் திணிக்கப் பட்டதால், மீனவரல்லாத உள்ளூர் மற்றும் வெளியூர் பண முதலைகள் மீன் பிடித் தொழிலில் கால் பதித்தது தனிக் கதை). இழு வலை என்பது கடலின் அடி ஆழத்தில் மணற்பரப்பு வரை சென்று கிடைக்கும் அனைத்தையும் வாரி சுருட்டும், மிகச் சிறிய கண்ணிகளை கொண்ட, பலம் வாய்ந்த நைலான் வலை. மற்ற அனைத்து பாரம்பரிய வலைக் கண்ணிகளும், தூண்டில்களும் முதிர்ந்த மீன்களை மட்டுமே பிடிக்கும் வகையிலே அமைக்கப் பட்டிருக்கும். பாரம்பரிய  வலைகள் அனைத்தும் கடலின் மேல் பகுதியிலும், நடுப் பகுதியிலும் மீன்பிடிக்கும் வகையிலேயே அமைக்கப் பட்டிருக்கும். சிறிய அளவிலான மீன்கள் தப்பி செல்லும் வகையில் பெரிய அளவிலான கண்ணிகளே பாரம்பரிய வலைகளில் பின்னப் பட்டிருக்கும். இவை பெரும்பாலும் பருத்தி நூல் கொண்டு தயாரிக்க படுகின்றன. ஆனால் மீன் பிடி தடைக் காலத்தில் பாரம்பரிய வலைகள் மற்றும் தூண்டில்களை பயன்படுத்தும் இயந்திர படகுகளையும் தடை செய்ய காரணம் என்ன?
   
      அதற்கு காரணம், இந்த கால கட்டங்களில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்க இது உதவியாக இருக்கிறது. ஆம் இந்த மீன் பிடி தடையானது வெளி நாட்டு மீன் பிடி கப்பல்களை கட்டுபடுத்தவில்லை. ஒரிசா கடல் பகுதி வரை வந்து சிங்கள மீனவர்களும் இந்த காலகட்டத்தில் மீன்களை அள்ளி செல்கின்றனர். வெளிநாட்டு மீன் பிடி கப்பல் முதலாளிகளுக்கு ஆதரவாக இந்த சட்டம் தொடர வேண்டுமா? இது எப்படி ஒரு உண்மையான மீன் பிடி தடைக் காலமாக இருக்க முடியும்? இவையெல்லாம் சட்டம் செய்பவர்களின் அறியாமையா? அல்லது தெரிந்தே செய்யும் அயோக்கியத் தனமா?
       
      மீன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் முக்கியமான காரணிகள் இழு வலை மட்டுமல்ல, ஆலைக் கழிவுகள், அணு உலைக் கழிவுகள், சாயப் பட்டறை கழிவுகள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களினால் கடலில் கலக்கும் பல ஆயிரம் காலன் கொதிநீர். இப்படி பல முக்கியமான காரணங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் 45 நாட்கள் நிறுத்திவைக்க இந்த அரசுகள் உடன்படுமா?

      பெருபாலும் கரை பகுதியில், மீன்கள் குறிப்பாக இறால் இனப்பெருக்கம் செய்வது ஆறுகள் வந்து கலக்கும் முகத்துவாரங்களில் தான். ஆனால் இன்று மணற் கொள்ளைகளால் பாலாறு உட்பட பல ஆறுகளும் கடல் வரை வந்து சேருவதில்லை. அது மட்டுமின்றி வந்து சேரும் ஆறும் முழுவதுமாக ஆலைக் கழிவுகளால் ரசாயனம் கலந்த விஷமாகத்தான் கடலில் வந்து கலக்கின்றது.

      இப்பொழுது சொல்லுங்கள் இந்த மீன் பிடி தடைக் காலம் உண்மையில் யாருக்காக?

பி.கு:- புதுச்சேரி அரசு மீன்பிடி தடைக் காலங்களில் விசைப் படகு உரிமையாளர்களுக்கு 30,000 இழப்பீடு தொகையாக வழங்குகிறது. இந்த நடைமுறை இதுவரை தமிழ்நாட்டில் பின்பற்ற படவில்லை.

No comments:

Post a Comment